Tuesday, April 1, 2014

கோடைகால நண்பன்


இது ஒரு நீண்ட நெடிய நாஸ்டால்ஜியா பதிவு. சன் மியூசிக் பார்த்துக்கொண்டே படிப்பவர்கள், சென்னை பத்ம சேஷாத்ரி ஸ்கூலில் படித்த(ப்ப)வர்கள், சமீபத்தில் காதலில் விழுந்தவர்கள் வெறும் ‘லைக்’ மட்டும் இட்டுவிட்டு இதைக் கடந்துவிடலாம்.

மழைக்காக கடைகளிலோ, பேருந்து நிழற்குடையிலோ ஒதுங்கி சலித்துக் கொள்பவர்களை விட, கோடைகால வெயிலுக்கு பயந்தொதுங்கி, அதன் உக்கிரம் தாங்காமல் மோர் (அ) கூல்ட்ரிங்க்ஸ் குடித்துக் கொண்டு அதை சபிப்பவர்கள் தான் அதிகம். ஆனால், நானோ மழையை விட, வெயிலை அதிகம் ரசித்துக் கொண்டா(டுபவன்)டியவன். மழை என்பது வீட்டிலிருந்தபடி ரசிக்ககூடிய ஒரு அழகான நடிகை போல; ஆனால், வெளியே வந்தால் சகிக்க முடியாத, மேக்கப் கலைந்த நடிகையாகி விடுகிறாள். ஆனால், வெயில் அப்படி அல்ல, எப்போதும் ரசிக்கக் கூடிய காதலி போல. கோபமடைந்து உக்கிரமானாலும் ரசிக்கலாம். ஏப்ரல், மே சூரியனின் வெப்பம் தலையிலிறங்கி, உடல் முழுவதும் பரவி, உள்ளங்கால் வரை சென்று முடிகிற பரவசத்தை சொல்லில் அடக்க முடியாது.

என்பதுகளில் இறுதியில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில், கிராமத்தில் என் பால்யத்தை ஆரம்பித்தேன். ஜூன் முதல் மார்ச் வரை பல்வேறு பருவநிலைகளுக்கும், பருவத் தேர்வுகளுக்கும் உட்பட்டு, முழு ஆண்டுத் தேர்வை முடிப்பதற்குள் படாத பாடுகளைப் பட்டு, இலவு காத்த கிளி போல கோடை விடுமுறைக்காக காத்துக் கொண்டிருப்போம். தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், மற்றும் சமூக அறிவியல் என ஒவ்வொரு தேர்வின்போதும் விடுமுறையை எதிர்நோக்கிய தீவிர மனநிலை தொக்கி நிற்கும். சமூக அறிவியல் பரீட்சையில், பிரிட்டனையும், ஜப்பானையும்  மேப்’பில் மாற்றி குறித்துவிட்டு, இங்க் பேனாவால் நண்பர்களின் வெள்ளைச் சீருடைகளில் நீல நிற ஓவியங்களை வரைந்துவிட்டு, பரீட்சை அட்டையை வீட்டில் கொண்டு தூக்கி எறிகிறபோது வருகிற ஆனந்தம் ஆறு ஆடி கார் வாங்கினாலும் வராது. 

கடைசி பரீட்சை முடிந்த மதியமே கிரிக்கெட் ஃபீவர் பிடித்துவிடும். அம்மா துணி துவைக்க வைத்திருந்த மரத்தாலான கட்டையை பேட்’டாகவும், அப்பா/தாத்தா-வின் கைத்தறி நூல் மிச்சங்களைக் கொண்டு செய்த பந்தை எடுத்துக்கொண்டு விளையாட ஓடிவிடுவோம். கோடையாதலால் ஏரிக்கரையும், குளமும் நீர் வற்றி நாங்கள் விளையாடுவதற்கென்றே ஓர் இடத்தை ஒதுக்கிக் கொடுத்துவிடும். வெற்றுடம்பே எங்களுக்கான ஜெர்சி. கிணறு, குளத்தில் எஞ்சியிருக்கும் தண்ணீரே எங்களுக்கான பெப்ஸி, கொக்ககோலாக்கள்.

எங்க ஊர் கிரவுண்டுகளைத் தவிர பக்கத்து ஊர் ஈடன் கார்டன், தர்மசாலாக்களிலும் போய் விளையாடுவதுண்டு. நாங்கள் ஆடும் கிரிக்கெட்டை, காலை, உச்சி, மாலை என வானத்தின் வெவ்வேறு நிலைகளிலிருந்து சூரியன் காசு கொடுக்காமல் பார்த்து கண்டு களிப்பான். நாங்கள் அவனை கண்டுகொண்டதே இல்லை. மேட்ச் முடிந்து, புழுதியை ஷூவாக மாட்டிக்கொண்டு, வீடு திரும்பி, என்னை தேடிக் களைத்த அம்மாவின் கையால் எனக்கே எனக்கென்று இருக்கும் டம்ப்ளரில் டீ குடித்தால்தான் அன்றைய நாள் முழுமையடையும்.
 
எங்கள் வீடு மாடி வீடு என்பதால், மொட்டைமாடியிலிருந்து உஷ்ணம் இறங்கி அறையினுள் வியாபித்து இருக்கும். ஃபேன், அதே உஷ்ணக் காற்றைத்தான் திரும்ப திரும்ப சுழல விட்டுக்கொண்டிருக்கும். இதனால், தெருவிலிருக்கும் கானிலிருந்து(அடி பம்ப்) குடம் குடமாக தண்ணீரை மொட்டை மாடி மற்றும் திண்ணைகளில் ஊற்றி குளுமைப்படுத்துவோம். சில சமயங்களில் மொட்டை மாடி (அ) திண்ணைகளிலேயே படுத்துறங்கி விடுவதுண்டு. கோடையில் குளிப்பதெல்லாம் பாத்ரூம் அறையில் இல்லை, அடிபம்பில் அடித்து தெருவிலேயே சுமார் இரண்டு மணிநேரம் குளிப்போம்.
 
கிரிக்கெட்டை அடுத்து கோடைகால அதீத எதிர்ப்பார்ப்புகளில் ஒன்று, பாண்டிச்சேரி-கதிர்காமத்திலுள்ள என்னுடைய அத்தை வீட்டுக்குச் செல்வது. என் வாழ்க்கையின் மிக முக்கியமான அத்தியாயம். பேருந்தில் அம்மா/அப்பா (அ) தாத்தா/பாட்டியின் மடியில் படுத்துக்கொண்டு பாண்டிச்சேரி இறங்கி, அத்தை வீடு இருக்கும் தெருவில் நடக்கும்போது வருகிற அளவில்லாத மகிழ்ச்சி என்பது, நான்கு கிராண்ட் ஸ்லாமயும் ஒரே வருஷத்தில் வாங்கியதுக்கு ஒப்பானது. பாண்டிச்சேரியின் எல்லா சாலைகளின் ஓரத்தில் இருபுறமும் சாக்கடை நீர் ஓடிக்கொண்டிருப்பது வித்தியாசமாகத் தோன்றும். அத்தை மகன்களுடன் அந்த செம்மண் பூமியில் கிரிக்கெட் விளையாடுவது, சைக்கிளில் ஊர் சுற்றுவது, முருகா, ஆனந்தா தியேட்டரில் படம் பார்ப்பது, செடில் திருவிழா என்று படு சுவாரஸ்யமாகச் இருக்கும்.
 
இதற்குள் இரண்டு மாத கோடை விடுமுறை முடிந்து தொலைக்கும். பாண்டிச்சேரியிலிருந்து கிளம்பும் போது மறக்காமல் என் மாமா செலவுக்கு காசு கொடுத்தனுப்புவார். கிளம்ப மனமின்றி கிளம்புவேன்.  ஊர் திரும்பினால் கண்டிப்பாக பாஸ் ஆகியிருப்பேன். மூடியிருந்த பள்ளி ஜன்னலில் ரிசல்ட் ஒட்டியிருப்பார்கள். மீண்டும் அதே சுழற்சி. அடுத்த வகுப்பு, புது புத்தகங்கள், நோட் புக்குகள், காலண்டு, தீபாவளி, அரையாண்டு, பொங்கல், முழுஆண்டு அப்புறம் மீண்டும் அந்த கோடை.
 
இப்படியாக, பத்தாம் வகுப்பு, +2 வரை தொடர்ந்தது. கல்லூரி வந்தேன். காலங்கள், காட்சிகள் மாறின. கேம்பசில் வேலை கிடைத்து, நான்காண்டு கல்லூரி படிப்பை எப்படா முடிப்பேன் என்று முடித்து ஒரு மாதம் வீட்டில் கோடை விடுமுறையை கழித்தேன். அதே கோடை, அதே சூரியன்; ஆனால் ரசிக்க முடியவில்லை. ஆஃபர் லெட்டர், வொர்க் லொகேஷன் என்று மனம் பிதற்றிக்கொண்டிருந்தது. ஒரு மாதம் முடிவதற்குள்ளே வேலைக்கான கால்(Call) வந்தது. 2007 சம்மர். அன்று தொடங்கி 6 1/2 ஆண்டுகள் இடைவெளியில்லாத நீண்ட பயணம். பெயருக்குத்தான் வெகேஷன் லீவ். ஆனால் ஒருபோதும் எடு(த்த)ப்பதில்லை. ஒவ்வொரு சம்மரும் ஏ.சி ரூமில், கணினி மற்றும் மனித எந்திரங்களுக்கிடையே கழிந்தது. சூரியனை ரசிக்கக் கூட நேரமும், மனமும் இருக்காது. பத்து  ஆண்டுகளாக என்னைத் தேடி, களைத்து ஏமாந்து போயிருப்பான் சூரியன். காடுகளில், வயல்களில் இருக்கவேண்டிய காய், கனிகள், ஃப்ரிட்ஜ்-களில் அடைபட்டிருப்பது போல இருந்தேன்.
 
இதோ விழித்துவிட்டேன். 10 வருடங்கள் கழித்து, சுதந்திர கோடையை அனுபவிக்க மீண்டும் கிளம்பிவிட்டேன். தாயை நோக்கி சிரித்துக் கொண்டு முட்டி போட்டுக்கொண்டே ஓடும் சிறு மழலை போல, என் உற்ற தோழன் சூரியனை, பால்ய சிநேகிதனை ஆர்ப்பரித்து ஆரத்தழுவ ஆயத்தமாகிவிட்டேன்.