Wednesday, March 19, 2014

தராசு


   அம்பத்தூரிலிருந்து வேளச்சேரி சற்று அதிக தொலைவுதான் என்றாலும், என் பள்ளிக்கால நண்பன் முத்துக்குமரனை சந்திக்க போய்க்கொண்டிருப்பதால் அவ்வளவு தூரம் ஒரு பொருட்டாக தெரியவில்லை எனக்கு. நானும், முத்துவும் ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் பத்தாவது வரை ஒன்றாகப் படித்தோம். அவன் நன்றாகப் படித்து +2 வில் நல்ல மார்க் எடுத்து, அண்ணா பல்கலைகழகத்தில் இஞ்சினியரிங் படித்துவிட்டு இப்போது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறான். நானும் அவனளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு சுமாராகப் படித்து, மேற்படிப்புக்காக ஊரைப் பிரிய மனமின்றி உள்ளூரிலேயே அதிக வசதியற்ற ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்துவிட்டு, ஊர்க்காரர்களின் கேள்விக் கணைகளுக்கு பயந்து, இப்போது இந்த சென்னை மாநகரில் வேலைக்காக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறேன். மாநகரப் பேருந்தில் பயணம் செய்வது ஒரு கட்டத்தில் பிடித்து போய் விட்டது. நண்பன் ரூமில் தனியாக இருக்கும் நேரத்தில், பஸ்சுக்கு மட்டும் போக வர காசு எடுத்துக்கொண்டு சும்மாவே சுற்றிவிட்டு வந்த நாட்களும் உண்டு. தோராயமாக இரண்டு வருடமிருக்கும் அவனைப் பார்த்து. இன்று காலை தான் அவனுக்கு ஃபோன் செய்தேன். அவனை பார்க்கத்தான் இப்போது மாநகரப் பேருந்தில் வேளச்சேரி சென்று கொண்டிருக்கிறேன்.

அவன் சொன்னபடி வேளச்சேரி பேருந்து நிலையத்தில் இறங்கி அவனுக்காக காத்திருந்தேன். பத்தாவது நிமிடத்தில், ஒரு கருப்பு நிற பல்ஸர் என்னை நோக்கி வந்தது. அவன்தான். தத்தம் நலன், மற்றும் குடும்ப நலங்களை விசாரித்தோம். எனது உள்வாங்கிய கண்ணும், சற்றே நொடித்த வயிறும் என்னுடைய பசியை அவனுக்கு சொல்லாமல் சொல்லியிருக்க வேண்டும். அடுத்த நொடியே, “வா மச்சான், சாப்பிட போலாமென்றான்”. வேளச்சேரி ரயில் நிலையம் போகும் வழியில், பக்கவாட்டில் இரண்டு அரக்கன் போல், எதிரெதிரே கேஎஃப்சி-யும், மெக் டோணல்ட்-ம் ஒன்றுக்கொன்று போட்டியாக நின்று கொண்டிருந்தது. சுமார் எட்டு/பத்து வருடம் முன்பு இவ்விடத்தில் ஏரியும், முட்புதருமாக இருந்ததாக என் சித்தப்பா ஒரு முறை சொன்னதாக ஞாபகம். 

கேஎஃப்சி-யில் நுழைந்து இரண்டு சிக்கன் ஸிங்கர் மீல் ஆர்டர் செய்தான். 600 ரூபாய் பில் வந்தது. சேவை மற்றும் இதர வரிகள் மட்டுமே  80 ரூபாய். ஒரு வேளை சாப்பாட்டிற்க்காக 600 ரூபாய் அவன் செலவு செய்தது எனக்கு கோபமாகவும், ஒரு விதத்தில் என்னால் தான் என்பதால் வருத்தமாகவும் இருந்தது. சாப்பிட மனம் முழுவதுமாக ஒட்டவில்லையென்றாலும், அவனுக்காக முழுவதுமாக சாப்பிட்டு முடித்திருந்தேன். சாப்பாட்டை தட்டில் வீணாக்குவது, அவனுக்கும் சரி, எனக்கும் சரி பிடிக்காது. அவனிடமிருந்து எனக்கு தொற்றிய பழக்கம் தான் அது. எல்லா இடத்திலும் அவனே செலவு செய்து கொண்டிருந்ததால், ஒரு நுண்ணிய குற்றவுணர்வு என்னுள் வியாபித்திருந்தது. என் இயலாமையினால் விளைந்த உணர்வுதான் அது. என்னிடம் இருந்ததோ நான் திரும்பி போக பஸ்சுக்கு வைத்திருந்த 20 ரூபாய். அம்பத்தூருக்கு பஸ் டிக்கெட் விலை 15 ரூபாய். இதை வைத்துக்கொண்டு நான் அவனுக்காக என்ன வாங்கித்தந்துவிட முடியும்

சென்னை வந்ததிலிருந்து நான் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டிருந்தேன். முத்துவோ தொடர்ந்திருந்தான் என்பது அருகிலிருந்த பெட்டிக்கடைக்கு சென்று இரண்டு சிகரெட் வாங்கியபோதுதான் எனக்கு தெரிந்தது. அது எனக்கு பெரிதாக ஆச்சர்யம் தரவில்லை. ஒரு சிகரெட்டை என்னிடம் நீட்டினான். நான் அதை நிராகரித்தது அவனுக்கு ஆச்சர்யம் அளித்தது. ஒரு கட்டத்தில் செயின் ஸ்மோக்கராக இருந்தவன் நான். 

பள்ளிக்கால வாழ்க்கை தொட்டு, நேற்று ரூமில் கொசு விடாமல் கடித்த கதை வரை எல்லாவற்றையும் பேசி முடித்திருந்தோம். அவனின் பேச்சிலும் சரி, உடல் மொழியிலும் சரி, தான் ஒரு பந்தாவான, பகட்டான வாழ்க்கை வாழ்கிறோம் என காட்டிக்கொள்ளாமல், அசால்ட்டாக என்னிடம் பழகியது என்னை ஆச்சர்யபட வைத்தது. என் நண்பனை பற்றி எனக்கு தெரியுமென்றாலும், இந்த ஊரைப்பற்றி நல்ல அபிப்ராயம் எனக்கு இருந்ததில்லை. மேற்கத்திய வாழ்வை நோக்கி கொஞ்சம், கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிற சென்னை மாநகரம் என் நண்பனை கொஞ்சம் கூட சலனப்படுத்தவில்லை. அவனின் கேஎஃப்சி பிரவேசம் மட்டும் விதிவிலக்கு. ஒருவேளை அவனுடைய இடத்தில் நான் இருந்திருந்தால் அந்த பகட்டு என்னிடம் இருந்திருக்கக்கூடும்.


நான் சொல்ல வந்தது அதுவல்ல. இரண்டு சிகரெட்டுக்கு காசு கொடுக்க 500 நூறு ரூபாயை நீட்டினான் முத்து. கடைக்காரன் சில்லறை இல்லையென கூறிவிடவே, சட்டென்று, “மச்சான் உங்கிட்ட இருக்காடா” என, என்னிடமிருந்த 20 ரூபாயை என் பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்துவிட்டு மீதி 4 ரூபாய்க்கு சாக்லேட் எடுத்துகொண்டு என்னிடம் இரண்டை திணித்தான். அவன் அவசரமாக கிளம்ப வேண்டியிருந்ததால், என்னை மீண்டும் அதே பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு, அடிக்கடி ஃபோன் பண்ணுடா எனக்கூறிவிட்டு கிளம்பினான். எனக்கு, நான் திரும்பிபோக காசில்லை என்ற எண்ணத்தை விட, அவனுக்காக ஒரு 20 ரூபாயாவது செலவு செய்ய முடிந்த்தே என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பப் போவது இல்லை. இரண்டு நிமிடம் அங்கேயே உறைந்தபடி நின்று என்ன செய்வது என்று அறியாமல், என் கண்ணிலிருந்து முதல் கண்ணீர் துளி புறப்படும் முன்னரே அதை துடைத்துவிட்டு அம்பத்தூர் நோக்கி நடக்கத் துவங்கினேன். யூ-டர்ன் செய்துவிட்டு அதே ரோட்டில் மீண்டும் வந்த முத்து, என்னை கண்டு, வண்டியை நிறுத்தி ஒரு கணம் என் கண்களையே பார்த்தவன், எல்லாம் புரிந்தவனாய், “ஏறுடா பைக்கில” என்றான். இந்த முறை கண்ணிலிருந்து புறப்பட்ட கண்ணீர்துளி, துடைக்க அவகாசம் கொடுக்காமல், புவிஈர்ப்பு விசையினால் பூமி நோக்கி விழுந்துகொண்டிருந்தது.

சென்னை இரவுகள் @ தி.நகர்

                               
    தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் புழங்குகிற தியாகராய நகர் () தி.நகர், சென்னையின் மிக முக்கியமான வணிகப் பகுதி. துணிக்கடைகள், நகைக்கடைகள், ஹோட்டல்கள், மாநகர பேருந்து நிலையம், மாம்பலம் ரயில் நிலையம், மற்றும் சில்லறை வணிக சிறு கடைகள் என மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிற பகுதி.

அன்று திங்கள் கிழமை. இரவு 10 மணிக்கே, நாங்கள் மூவரும்  அங்கு சென்றுவிட்டோம். இரவு முழுவதும் அங்கு இருக்கவேண்டியிருந்ததினால், சாலையில் டூ வீலருக்கு உத்தரவாதம் இல்லையென்றெண்ணி, மாம்பலம் ரயில்வே பார்க்கிங்-ல் நிறுத்திவிட்டு வரும் வழியில் உள்ளூர் பெருமாள் சாமி, நன்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அமர்ந்து ஊர்வலம் போய்க்கொண்டிருந்தார். அதே நேரம், பல பெருமாள் சாமிகள் இந்த உலகையே மறந்த நிலையில், டி நகரின் வீதியினூடே அழுக்கு சட்டை சகிதமாக, எந்தவித பிரக்ஞையிமின்றி அலைந்து திரிந்து கொண்டிருந்ததை காணமுடிந்தது.
பேருந்து நிலையம்
பேருந்து நிலையம் எதிரே அமைந்த டீக்கடைக்கு சென்று டீ அடித்துவிட்டு பேருந்து நிலையம் நுழைகையில், பேருந்துகள் அனைத்தும் நாள் முழுக்க சென்னையை சுற்றிய களைப்பில் பெருமூச்சு விட்டு, பின்பு அடங்கின. மெல்ல மெல்ல ஆட்டோ எனப்படும் மஞ்சள் நிற வஸ்துக்கள் இப்போது பேருந்து நிலையத்தின் வாயிலை ஆக்கிரமிக்க ஆரம்பித்திருந்தன. கடைசி பஸ்சை தவற விட்ட மக்கள், பெரும்பாலும் ஆண்கள், ஷேர் ஆட்டோவுக்காகவோ, இரவு நேர பேருந்துக்காகவோ கால் கடுக்க காத்திருந்தனர். இவர்களுக்கிடையில் ஒரே ஒரு, 40 வயது மதிப்பிடத்தக்க, பெண்மணி மட்டும் பஸ்சுக்காக காத்திருக்கும் தோரணையில் நின்று கொண்டிருந்தாள். ஷேர் ஆட்டோக்காரர்கள், வடபழனியையும், கோயம்பேடையும் கூறுபோட்டு விட்டுக்கொண்டிருந்தனர். ஓரிரு டீக்கடைகள் மற்றும் இரவு நேரச்சிற்றுண்டி கடைகளை தவிர்த்து மற்ற எல்லா கடைகளும் மூடப்பட்டுவிட்டிருந்தன.

Employees of the Textile Giants

சரவணா ஸ்டோர், ஜெயச்சந்திரன் என தி.நகரின் மிகப்பெரும் துணிக்கடலில் (நின்றுகொண்டு) வேலை பார்க்கும் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் தத்தம் தோழன், தோழிகளோடு, அவர்களது கால்வலி பொருட்படுத்தாது, புன்னகையோடு அரட்டையடித்தபடி அவர்களது அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பெரும்பாலும் நடிகர், நடிகைகள், பார்த்த/பார்க்கபோகும் சினிமாக்களை பற்றியே அவர்களது பேச்சு இருந்தது. ரங்கநாதன் தெருவில், பகலில் மனிதர்கள் அலட்சியமாக விட்டுச்சென்ற, தூக்கியெறிந்த குப்பைகளை, அந்த குப்பைகளுக்கு கொஞ்சமும் பொறுப்பாகாத துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்துகொண்டிருந்தனர்.
நள்ளிரவு 12:00

சிவப்புத் துணி போர்த்திய பானையில் குல்ஃபி ஐஸ் விற்றுகொண்டிருந்த இளைஞர்கள் மூன்று சக்கர வாகனத்தில் அங்குமிங்கும் திரிந்துகொண்டிருந்தனர். மஞ்சள் நிற சிக்னல் விளக்குகள் தனக்கு பிடித்தமான காதலியை பார்த்துவிட்ட மகிழ்ச்சியில் நொடிக்கொருமுறை கண்ணடித்துக்கொண்டிருந்தன. இந்த காதலை கொஞ்சமும் பொருட்படுத்தாமல், கால் டாக்ஸிகள் மற்றும் டூ வீலர்கள் சிக்னலை வேகமாக பாய்ந்து கடந்து, மேம்பாலத்தில் ஏறிக்கொண்டிருந்தன.

கொசு தன் காதில் வந்து பாடிய இன்னிசை ராகத்தைக் கூட கேட்க விரும்பாமல், உலகிலேயே மிகவும் அழுக்கான போர்வை என்று அனைவரது பாராட்டையும் பெற்ற போர்வையை போர்த்திக்கொண்டு பேருந்து நிழற்குடையில் உறங்கிக்கொண்டிருந்தார் ஒரு மனிதர்.  அந்த 40 வயதுமிக்க பெண்மணி இன்னும் அதே இடத்தில், செல்ஃபோனை நோண்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தாள். அவ்வப்போது ஆட்டோக்காரகளிடம் சென்று முணுமுணுத்துக்கொண்டிருந்தாள். பின் சாலையைக் கடந்து, பேருந்து நிலையத்தின் எதிரே சென்று நின்றுகொண்டாள். இதையெல்லாம், நின்றுகொண்டிருந்த ஒரு பேருந்தின் பின் சீட்டில் அமர்ந்து கொண்டு கவனித்துக்கொண்டிருந்தேன்.

அதில் ஓர் ஆட்டோக்காரரை அணுகி, ”யாருங்க அந்த பொம்பள, ரெண்டு மணி நேரமா இங்கயே நின்னுட்டு இருக்காங்க, நைட் ரோந்து போலீஸா, இல்ல ஐட்டக்கார பொம்பளையாஎன்று நான் கேட்க, “தெரியலைப்பா, போலீஸா இருந்தாலும் இருக்கலாம், இப்பல்லாம் நைட் போலீஸ் கெடுபுடி அதிகம் இருக்குஎன்றார் அவர். அதை நிரூபிக்கும் வகையில், போலீஸ் ரோந்து வாகனங்கள் கண்ணைப் பறிக்கும் வண்ண விளக்குகளை சுழலவிட்டுக்கொண்டு சுற்றி வந்துகொண்டிருந்தன. ரொம்ப நேரமாக அங்கேயே உலவிக் கொண்டிருந்த எங்கள் மீதே சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தது. வெள்ளை சட்டை அணிந்திருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒரு மீசைக்காரர் எங்களையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார். நாங்கள் அதை அலட்சியப்படுத்திவிட்டு, பஸ்சை எதிர்நோக்கி காத்திருப்பதுபோல் இருந்துவிட்டோம். ஒரு வயதானவரிடம் அந்தப் பெண்மணி எதோ பேசிக்கொண்டிருக்கையில், தாம்பரம் போகிற இரவுப் பேருந்து ஒன்று சடேலென வந்து நிற்க, வேகமாக ஓடிச்சென்று ஏறிக்கொண்டாள்.

ஒரு மணிவரை இப்படி மனித நடமாட்டம் இருந்துகொண்டிருந்ததாலும், வழக்கத்துக்கு மாறாக எதுவும் நடந்துவிடக்கூடிய சூழல் இல்லாதபடியும் இருந்ததால், மேம்பாலம் மேலேறிச் சென்று வந்துவிடலாமென்று எண்ணி நடக்க ஆரம்பித்தோம். மேம்பாலத்தின் இருபுறமும் மின்கம்பங்கள், கவுண்டமணியைக் கண்ட கரகாட்டக்காரன் செந்தில் போல் தலை குனிந்து நின்று கொண்டிருந்தன. மெர்குரி விளக்குகள் மஞ்சள் ஒளி மழையைப் ஏகாந்தமாகப் பொழிந்துகொண்டிருந்தது. மேம்பாலத்தில் ஏறுகையில், ரங்கநாதன் தெரு இப்போது குப்பை கூளங்களற்று சுத்தமாக காணப்பட்டது.  தேங்க்ஸ் டு துப்புரவு தொழிலாளர்கள். ஜிஆர்டி தங்க மாளிகை உள்ளிட்ட ஏனைய ஜுவல்லரி கடை செக்கியூரிட்டிகள் ஒன்று கூடி தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். போத்தீஸ் ரோடு வளைவில், போலீஸ்காரர்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், வாகன ஓட்டிகளையும் சல்லடை போட்டும், துருவி துருவி விசாரித்துக் கொண்டிருந்தது.

இப்படியாக மணி ஒண்ணைத் தாண்டியும் தி.நகர் ஒரு அமைதிப் பூங்காவைப் போலவும், மக்கள் நடமாட்டம் எப்போதும் இருந்தபடி இருந்ததனால், நெல்சன் மாணிக்கம் ரோடு போக முடிவு செய்தோம்.

 நெல்சன் மாணிக்கம் ரோடு

சூளைமேட்டில் இருக்கும் நெல்சன் மாணிக்கம் ரோட்டைப் பற்றி, குறிப்பாக இரவு நேரத்தில் அந்த ரோட்டைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இரவு மணி 11:00, அல்லது 11:30 க்கு மேல் நீங்கள் இந்த ரோட்டைக் கடக்க நேர்ந்திருந்தால், சாலை ஓரங்களில் உற்று நோக்கியிருந்தால் ஒருவேளை நான் சொல்ல வருவது பற்றி உங்களுக்கு பொறி தட்டலாம். லயோலா கல்லூரி சப்வே தொடங்கி, அமைந்தகரை ஸ்கைவாக் (SkyWalk) வரை உள்ள சாலைதான் நெல்சன் மாணிக்கம் சாலை. இந்த சாலையில் தான் பெரும்பாலான தமிழக மக்களுக்கு பரிச்சயமே இல்லாத தெலுங்கு நடிகர் சோபன் பாபு-வின் திருவுருவச்சிலை அமைந்துள்ளது. நான் சொல்ல வருவது கண்டிப்பாக இவரைப் பற்றி அல்ல. இந்த சாலையின் இருபுறமும், இரவு 11:30 க்கு மேல், கவர்ச்சியாக உடையணிந்த அழகான இளம் பெண்கள் ஆங்காங்கே நின்றுகொண்டிருப்பார்கள். பார்த்த மாத்திரத்தில் இவர்கள் பெண்கள் என்று தான் நம்புவீர்கள். உண்மையில் இவர்கள் க்ராஸ் டிரெஸ்சர்ஸ் என்று அழைக்கப்படுகிற திருநங்கைகள்.

இவர்கள் குழுக்களாகவோ, தனியாகவோ நின்று கொண்டு, சாலையில் கடக்கும் ஆண் மகன்களுக்கு வலை விரிப்பார்கள். வலையில் அகப்பட்ட பசித்த சிங்கங்களை(?) இந்த மான்கள் கவர்ந்து சென்று விருந்து வைக்கும். விசாரித்ததில், விருந்துக்கு 1500 ரூபாய் என்றும், அறையில் என்றால் 3000 ரூபாய் என்றாள் ஒருத்தி. மேலும் விபரங்கள் கேட்க எண்ணுகையில் ரொம்ப நேரம் இங்கு நிற்காதீர்கள், போலீஸ் தொல்லைஎன்றாள். அவர்கள் வியாபாரத்தை கெடுக்கவேண்டாமென்று எண்ணி விலகிச்சென்றுவிட்டோம். அவள் குரலில் ஒருவித மென்மை இருந்தது. அதிகாரத் தோரணையோ, மிரட்டும் தொணியோ இல்லை. பகல் நேரத்தில் நாம் பார்க்கும் திருநங்கைகளுக்கு நேரெதிர் குணாதிசயங்கள் கொண்டிருந்தனர்.

அவர்கள் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்து 300 அடி தள்ளி, சரியாக அந்த தெலுங்கு நடிகரின் சிலையருகே, போலீஸ் எங்களை மடக்கி பிடித்தது. நான் குடித்திருக்கிறேனா, இல்லையா என்று என் நலன் மேல் அக்கறை கொண்டு, என்னை ஊதச்சொன்னார் போலீஸ்காரர். ஊதிக்காட்டிய பிறகு, ஏமாற்றமடைந்த அவர் பேப்பர்களை சரிபார்த்துவிட்டு, பின் எங்களை அனுப்பிவிட்டார். அப்படியே இடப்பக்கம் திரும்பி, ஒரு சிறிய சந்து வழியே மீண்டும் அவர்களை சந்தித்து பேச எண்ணினோம். சந்தின் மூலை முடுக்குகளில், இருட்டினில் அங்காங்கே திருநங்கைகள் தான் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் யாரும் மிரட்டி வியாபாரம் செய்வதோ, தானாக பேச்சு வலிந்து பேச்சு கொடுப்பதோ இல்லை. இஷ்டபட்டு வந்து பேசும் ஆண்களிடம் மட்டுமே பேசுகின்றனர். இவ்விடத்தில் வரும்போது மட்டும் டூ வீலர்கள், கார்கள் மற்றும் கால்களுக்கு வேகம் குறந்துவிடும், அல்லது நின்றேவிடும்.

ஒரு வழியாக, ஒரு சந்தின் வழியே வந்து முன்பு பேசிய அதே நங்கையை பார்த்துவிட்டோம். அவளிடம் சென்று, உண்மையில் நாங்கள் வந்த விஷயத்தைச் சொன்னோம். சென்னை இரவு வாழ்கையை பற்றியும், திருநங்கைகளின் பிண்ணனி மற்றும் அவர்களின் இரவு வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ள வந்திருப்பதாகக் கூறினோம். அவளும் ஆச்சர்யத்தோடு கேட்டுக்கொண்டேயிருக்கும்போது அவள் கண்கள் அங்குமிங்கும் அலைந்தது. அவள் இப்போது பிசியாக இருப்பதை புரிந்துகொண்டு, பகல் நேரத்தில் அவளிடம் பேசுவதாகச் சொல்லிவிட்டு அவளது தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டோம். அதே தெருவில் சைக்கிளில் டீ விற்றுக்கொண்டிருந்தவரிடம் டீ குடித்துவிட்டு நெல்சன் மாணிக்கம் ரோட்டிலிருந்து கிளம்பி தி.நகர் விரைந்தோம்
  
கிளம்பும் நேரம்  


மணி இரண்டரை ஆகியிருந்தது. திநகர் இன்னும் அதே அமைதிப் பூங்காவாகவே காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒரே ஒரு டீக்கடை மட்டும் பாதி ஷட்டர் மூடியபடி, குழுக்களாக வந்தவண்ணமிருந்த இளைஞர்களுக்கு டீ, சிகரெட்டுகளை விநியோகிக்கும் சேவையை செய்துக்கொண்டிருந்தது. ஒருவித மயான அமைதி குடிகொள்ள ஆரம்பித்ததது. இன்னும் ஒரு மணி நேரம் சென்றால் கூட இவ்விடம் மீண்டும் சூடுபிடித்துக் கொள்ள ஆரம்பித்துவிடும்.  அரை மணி நேரம் அங்கேயே சுற்றிக்கொண்டுவிட்டு, 3 மணிக்கு அங்கிருந்து கிளம்பினோம்.