அம்பத்தூரிலிருந்து வேளச்சேரி சற்று அதிக
தொலைவுதான் என்றாலும், என் பள்ளிக்கால நண்பன் முத்துக்குமரனை சந்திக்க
போய்க்கொண்டிருப்பதால் அவ்வளவு தூரம் ஒரு பொருட்டாக தெரியவில்லை எனக்கு. நானும்,
முத்துவும் ஒரு அரசு ஆரம்பப் பள்ளியில் பத்தாவது வரை ஒன்றாகப் படித்தோம். அவன்
நன்றாகப் படித்து +2 வில் நல்ல மார்க் எடுத்து, அண்ணா பல்கலைகழகத்தில்
இஞ்சினியரிங் படித்துவிட்டு இப்போது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறான்.
நானும் அவனளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு சுமாராகப் படித்து,
மேற்படிப்புக்காக ஊரைப் பிரிய மனமின்றி உள்ளூரிலேயே அதிக வசதியற்ற ஒரு கல்லூரியில்
டிப்ளமோ படித்துவிட்டு, ஊர்க்காரர்களின் கேள்விக் கணைகளுக்கு பயந்து,
இப்போது இந்த சென்னை மாநகரில் வேலைக்காக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறேன்.
மாநகரப் பேருந்தில் பயணம் செய்வது ஒரு கட்டத்தில் பிடித்து போய் விட்டது. நண்பன்
ரூமில் தனியாக இருக்கும் நேரத்தில், பஸ்சுக்கு மட்டும் போக வர காசு
எடுத்துக்கொண்டு சும்மாவே சுற்றிவிட்டு வந்த நாட்களும் உண்டு. தோராயமாக இரண்டு
வருடமிருக்கும் அவனைப் பார்த்து. இன்று காலை தான் அவனுக்கு ஃபோன் செய்தேன். அவனை
பார்க்கத்தான் இப்போது மாநகரப் பேருந்தில் வேளச்சேரி சென்று கொண்டிருக்கிறேன்.
அவன் சொன்னபடி வேளச்சேரி பேருந்து நிலையத்தில்
இறங்கி அவனுக்காக காத்திருந்தேன். பத்தாவது நிமிடத்தில், ஒரு கருப்பு நிற பல்ஸர்
என்னை நோக்கி வந்தது. அவன்தான். தத்தம் நலன், மற்றும் குடும்ப நலங்களை
விசாரித்தோம். எனது உள்வாங்கிய கண்ணும், சற்றே நொடித்த வயிறும் என்னுடைய பசியை அவனுக்கு சொல்லாமல் சொல்லியிருக்க வேண்டும். அடுத்த நொடியே, “வா மச்சான், சாப்பிட
போலாமென்றான்”. வேளச்சேரி ரயில் நிலையம் போகும் வழியில், பக்கவாட்டில் இரண்டு
அரக்கன் போல், எதிரெதிரே கேஎஃப்சி-யும், மெக் டோணல்ட்-ம் ஒன்றுக்கொன்று போட்டியாக
நின்று கொண்டிருந்தது. சுமார் எட்டு/பத்து வருடம் முன்பு இவ்விடத்தில் ஏரியும்,
முட்புதருமாக இருந்ததாக என் சித்தப்பா ஒரு முறை சொன்னதாக ஞாபகம்.
கேஎஃப்சி-யில் நுழைந்து இரண்டு சிக்கன் ஸிங்கர் மீல் ஆர்டர் செய்தான். 600 ரூபாய்
பில் வந்தது. சேவை மற்றும் இதர வரிகள் மட்டுமே
80 ரூபாய். ஒரு வேளை சாப்பாட்டிற்க்காக 600 ரூபாய் அவன் செலவு செய்தது
எனக்கு கோபமாகவும், ஒரு விதத்தில் என்னால் தான் என்பதால் வருத்தமாகவும் இருந்தது.
சாப்பிட மனம் முழுவதுமாக ஒட்டவில்லையென்றாலும், அவனுக்காக முழுவதுமாக சாப்பிட்டு
முடித்திருந்தேன். சாப்பாட்டை தட்டில் வீணாக்குவது, அவனுக்கும் சரி, எனக்கும் சரி
பிடிக்காது. அவனிடமிருந்து எனக்கு தொற்றிய பழக்கம் தான் அது. எல்லா இடத்திலும்
அவனே செலவு செய்து கொண்டிருந்ததால், ஒரு நுண்ணிய குற்றவுணர்வு என்னுள் வியாபித்திருந்தது.
என் இயலாமையினால் விளைந்த உணர்வுதான் அது. என்னிடம் இருந்ததோ நான் திரும்பி போக
பஸ்சுக்கு வைத்திருந்த 20 ரூபாய். அம்பத்தூருக்கு பஸ் டிக்கெட் விலை 15 ரூபாய். இதை வைத்துக்கொண்டு நான் அவனுக்காக என்ன வாங்கித்தந்துவிட முடியும்
சென்னை வந்ததிலிருந்து நான் புகை பிடிக்கும்
பழக்கத்தை விட்டிருந்தேன். முத்துவோ தொடர்ந்திருந்தான் என்பது அருகிலிருந்த
பெட்டிக்கடைக்கு சென்று இரண்டு சிகரெட் வாங்கியபோதுதான் எனக்கு தெரிந்தது. அது
எனக்கு பெரிதாக ஆச்சர்யம் தரவில்லை. ஒரு சிகரெட்டை என்னிடம் நீட்டினான். நான் அதை
நிராகரித்தது அவனுக்கு ஆச்சர்யம் அளித்தது. ஒரு கட்டத்தில் செயின் ஸ்மோக்கராக இருந்தவன்
நான்.
பள்ளிக்கால வாழ்க்கை தொட்டு, நேற்று ரூமில் கொசு விடாமல் கடித்த கதை வரை
எல்லாவற்றையும் பேசி முடித்திருந்தோம். அவனின் பேச்சிலும் சரி, உடல் மொழியிலும்
சரி, தான் ஒரு பந்தாவான, பகட்டான வாழ்க்கை வாழ்கிறோம் என காட்டிக்கொள்ளாமல்,
அசால்ட்டாக என்னிடம் பழகியது என்னை ஆச்சர்யபட வைத்தது. என் நண்பனை பற்றி எனக்கு தெரியுமென்றாலும், இந்த
ஊரைப்பற்றி நல்ல அபிப்ராயம் எனக்கு இருந்ததில்லை. மேற்கத்திய வாழ்வை நோக்கி
கொஞ்சம், கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிற சென்னை மாநகரம் என் நண்பனை கொஞ்சம் கூட
சலனப்படுத்தவில்லை. அவனின் கேஎஃப்சி பிரவேசம் மட்டும் விதிவிலக்கு. ஒருவேளை அவனுடைய இடத்தில் நான்
இருந்திருந்தால் அந்த பகட்டு என்னிடம் இருந்திருக்கக்கூடும்.
நான் சொல்ல வந்தது அதுவல்ல. இரண்டு
சிகரெட்டுக்கு காசு கொடுக்க 500 நூறு ரூபாயை நீட்டினான் முத்து. கடைக்காரன்
சில்லறை இல்லையென கூறிவிடவே, சட்டென்று, “மச்சான் உங்கிட்ட இருக்காடா” என,
என்னிடமிருந்த 20 ரூபாயை என் பாக்கெட்டிலிருந்து எடுத்து கொடுத்துவிட்டு மீதி 4
ரூபாய்க்கு சாக்லேட் எடுத்துகொண்டு என்னிடம் இரண்டை திணித்தான். அவன் அவசரமாக
கிளம்ப வேண்டியிருந்ததால், என்னை மீண்டும் அதே பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டு,
அடிக்கடி ஃபோன் பண்ணுடா எனக்கூறிவிட்டு கிளம்பினான். எனக்கு, நான் திரும்பிபோக
காசில்லை என்ற எண்ணத்தை விட, அவனுக்காக ஒரு 20 ரூபாயாவது செலவு செய்ய முடிந்த்தே
என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பப் போவது இல்லை. இரண்டு
நிமிடம் அங்கேயே உறைந்தபடி நின்று என்ன செய்வது என்று அறியாமல், என் கண்ணிலிருந்து
முதல் கண்ணீர் துளி புறப்படும் முன்னரே அதை துடைத்துவிட்டு அம்பத்தூர் நோக்கி
நடக்கத் துவங்கினேன். யூ-டர்ன் செய்துவிட்டு அதே ரோட்டில் மீண்டும் வந்த முத்து,
என்னை கண்டு, வண்டியை நிறுத்தி ஒரு கணம் என் கண்களையே பார்த்தவன், எல்லாம் புரிந்தவனாய், “ஏறுடா
பைக்கில” என்றான். இந்த முறை கண்ணிலிருந்து புறப்பட்ட கண்ணீர்துளி, துடைக்க
அவகாசம் கொடுக்காமல், புவிஈர்ப்பு விசையினால் பூமி நோக்கி விழுந்துகொண்டிருந்தது.