Thursday, May 22, 2014

"திங்கட் கிழமை" - சாத்தான் தேவதையான கதை


+1, +2 படித்துக்கொண்டிருக்கும்போதும், விடுமுறை மற்றும் ஞாயிறு முடிந்து கல்லூரி ஹாஸ்டலுக்கு திரும்பும்போதும், அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருத்தல் என்பது ரணக்கொடூரம். திங்கட்கிழமை லீவ்போட்டுவிட்டு நாள்முழுக்க தூங்கிவிடலாமென்று தோன்றும். ஆனால் வேறு வழியின்றி எழுந்து, மஞ்சள் நிற வெளிச்சத்தில் வேண்டாவெறுப்பாய் காண்டாமிருகம்போல் குளித்துவிட்டு, அம்மா கொடுக்கும் டீயை குடித்துவிட்டு, வாசல்வரை அம்மா வந்து எட்டி சகுனம் பார்த்து, எனக்கு டாட்டா சொல்லிவிட்டு, ஐந்தரை, ஆறு மணிக்கு விழுப்புரம் பஸ்டாண்டில் பஸ் ஏறி, காலை 10 மணிக்கு கள்ளக்குறிச்சி/சென்னை சென்று இறங்கினால் தான் திங்கட்கிழமை என்ற எமகாத எரிச்சல் அடங்கும்.

ஹாஸ்டல் நாட்களில் கூட வாரயிறுதிகளில் டி-நகர், தேவி தியேட்டர் என சுற்றிவிட்டு ஞாயிறு இரவன்று திங்களைப் பற்றி நினைக்கையில், அக்தர் பாலை எதிர்கொள்ளும் கங்குலி போல் கிடிகிடுவென்று நடுங்கும். அப்பயத்தைப் மறக்க டிவி ஹாலிலோ, நண்பனின் கம்பியூட்டரிலோ படம் பார்த்துவிட்டு அப்படியே தூங்கிப்போவேன். ஆனால் திங்கட்கிழமையை எப்படியாவது கடத்திவிட்டால், அடுத்து வருகிற நான்கு நாட்களை எதிர்க்கொள்ளக்கூடிய தைரியம் தானாகவே வந்துவிடும். இந்த திங்கள் சுழற்சி பள்ளி, கல்லூரி தாண்டி ஆறு வருட ஐ-டி வேலையிலும் தொடர்ந்ததுதான் முகேஷ்த்தன சோகம்.

+2ல நல்லா படிச்சி மார்க் வாங்கினா காலேஜ்-ல ஜாலியா இருக்கலாம்னு ஸ்கூல் வாத்தியார் சொன்னதும், காலேஜ்-ல நல்லா படிச்சி வேலை வாங்கிட்டா அப்புறம் லைஃப்ல செட்டில் ஆகிடலாம்னு புரொஃபசர் சொன்ன பொன்மொழிகளும் அடிக்கடி ஞாபகம் வந்து கடுப்பேற்றும். அதையெல்லாம் லெஃப்ட் கையால் தள்ளிவிட்டு, ரைட் லெக்-கால் மண்டே என்ற மெகா பூதத்தை எதிர்கொள்வேன். அந்த பூதம் என்னை அமெரிக்கா வரை வெள்ளை உருவில் விரட்டி வந்து என்னை மிரட்டியது. வீக்கெண்டில் மினியாபொலிஸ் டவுண்டவுன், இண்டியன் ரெஸ்டாரண்டில் இந்திய சாப்பாடு, வால்மார்டில் ஷாப்பிங், கார்மைக்கில் ஆங்கிலப் படம் என்று சரமாரியாகச் சுற்றிவிட்டு, அன்றிரவு மண்டே பற்றி நினைக்கையில், கிளையண்ட் மீட்டிங், வீக்லி ஸ்டேட்டஸ் மீட்டிங், டெலிவரி என ஆக்டோபஸ் கைகள் வந்து கழுத்தை நெரிக்கும்.

ஒரு கட்டத்தில் உங்க பூசாரித்தனமும், பொங்கச்சோறும் வேண்டாமென்று முடிவெடுத்தபின்னர்தான் (அதான், அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு டாட்டா காட்டிவிட்டு இந்திய ஜனநாயகத்தில் மீண்டும் இரண்டறக் கலந்தது) பாலுமகேந்திரா, ராம், வெற்றிமாறன் போன்ற தேவதைகளில் கைகள் நீண்டு என்னை அரவணைத்தன. இது திடீர் முடிவல்ல. கல்லூரி முதலாமாண்டிலிருந்தே என் சினிமாக்காதலியை ஒருதலையாகக் காதலித்து வந்தேன். அவள் என்னை திரும்பி கண்கொண்டு பார்க்கவே பத்தாண்டுகள் ஆனது. இனிதான் கரம்பிடிக்க வேண்டும். பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளி செல்லும் உணர்வு. 520 கசப்பான திங்கட்கிழமைகளுக்குப் பிறகு, சுதந்திரமான, அர்த்தமுள்ள திங்கட்கிழமைகளை பார்க்க ஆரம்பித்தேன்.

“ராம்” என்ற யூனிவர்சிட்டியில் சேர வாய்ப்பு கிடைத்தபோதுதான் கலங்கிய என் மனக்குட்டை தெளிவுற்றது. ஒரு தேனீ போல சுறுசுறுப்பாகவும், ஆர்வமாகவும் சினிமாத்தேன் சேகரிக்க ஆரம்பித்தேன். ராம், எல்லா வகையான பூக்களிலிருந்தும் எங்களை தேனெடுக்க வைத்தார். எது தேன் என்பதே தெரியாமலிருந்த எனக்கு இதுதான் தேனென்று கூறினார். ஆனால் அதை அவர் எங்களுக்கு ஸ்பூனால் ஊட்டவில்லை. மண்டே என்ற பூதம் இப்போது கிட்டதட்ட இப்போது மறைந்தேவிட்டது. மண்டே மேட்னிகளில் சினிமா செல்லும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைத்துவிடும். இன்ஸ்டிடியூட்டில் அமர்ந்து, ராம் ஆஃபீஸில் அமர்ந்து கதை விவாதிப்பது எத்தனை பாக்கியமான நிமிடங்கள். கிட்டத்தட்ட எது திங்கட்கிழமை, எது ஞாயிறு என்றே தெரியாமல் போனது.

அரசு துவக்கப்பள்ளியில் படித்த நான் ஹார்வர்ட் யூனிவர்சிட்டிக்கு சென்று ஏ, பி, சி, டி பயில ஆரம்பித்தேன். அதுதான் “தரமணி” படத்தில் வேலை செய்யும் வாய்ப்பு. அப்படத்தை பார்த்தே ஏ, பி, சி, டி கற்றுக்கொண்டேன். அதை வைத்துக்கொண்டு வாக்கியம் அமைப்பது மட்டுமே பாக்கி. நான் எடுக்கப் போகும் எல்லா படங்களின் டைட்டில் கார்டும், “நன்றி பாலுமகேந்திரா”, “நன்றி ராம்” என்று துவங்குவதே சரியாக இருக்கும்.

2 comments: