இது தலைமுறைகள் படத்திற்கான விமர்சனம் அல்ல. இப்படம் என்னிடம் இட்டுச்சென்ற/கூடவே இருக்கின்ற உணர்வுகளை பற்றிய பதிவு. 4 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு செய்துவிட்டேன். பாலுமகேந்திரா & இளையராஜா என்ற இரு காந்தங்கள் மட்டுமே என்னை தியேட்டருக்கு இழுத்து வந்தது. படம் ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்னரே சென்றுவிட்டேன். சத்யம் வாசலில் அமர்ந்துகொண்டு 'தலைமுறைகள்' போஸ்டரையே பார்த்துகொண்டிருந்தேன். பக்கத்திலிருந்த ராம்லீலா, தூம்3 போன்ற போஸ்டர்கள் என்னை சிறிதும் சஞ்சலப்படுத்தவில்லை.
அரங்கம் உள்ளே நுழைந்ததும், பெரும்பாலும் நடுத்தர வயது மக்கள் தத்தம் மக்களோடு வந்திருந்தனர் ,சில முதியவர்கள், சில இளைஞர்கள். ஒரு ஆங்கில கார்டூன் படத்திற்கு வந்திருந்ததை போல நிறைய பொண்டு பொடிசுகளையும் பார்க்க முடிந்தது சற்றே ஆச்சர்யம் தான்.
கேனான் 5டி(6டி??) கேமரா என்பதால் அவரின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட லுக். ஆனால் அவரின் ஸ்டைல் ஆஃப் ஃபில்ம் மேக்கிங் முதல் காட்சியிலிருந்தே தெரிந்திவிடுகிறது. அங்குமிங்கும் அலையாத ஒரே இடத்தில் நிலையாக வைக்கப்பட்ட கேமரா, பாத்திரங்களின் இயல்பான உரையாடல் மற்றும் மேக்கப் என ரெகுலர் பாலுமகேந்திரா டச். காட்சிகள் நகர, நகர கதை மெல்ல மெல்ல நமக்குள் நம்மையறியாமல் வளர்ந்துகொண்டிருந்தது. சலனமற்ற தெளிந்த நீரோடையை போல திரைக்கதை மற்றும் காட்சியமைப்புகள்.
பாலுமகேந்திரா என்ற நடிகன்:
சுப்பு கதாப்பாத்திரத்துக்காக, முதல் முறையாக தன் தொப்பியையும், கண்ணாடியையும் துறந்து (?) தன் முழு அடையாளத்தை நமக்கு காட்டியிருக்கிறார் பாலுமகேந்திரா. சாதி, மதம் மற்றும் தமிழ் மீது அதீத பற்றுள்ள, தன் பிள்ளையையே வீட்டை விட்டு விரட்டிய அரக்க மனம் கொண்ட கிழவனாக பாலு. தன் பேரன் வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக மனம் இளகி, பேரனுடனான தன் கடைசிகாலத்தில் அனுபவங்களை பகிர்ந்து, மகிழ்ச்சியாக வாழ்ந்த வாழ்வை நம்முடன் பகிர்ந்திருக்கிறார். அவரின் கண்கள், அதுவும் இந்த வயதில் இத்தனை உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியவையா. தன் கண்கள் மூலமே, நம்மை சிரிக்க வைக்கிறார், உச் கொட்டவைக்கிறார், சிந்திக்க வைக்கிறார், அழ வைக்கிறார். ஆங்கிலம் மட்டுமே தெரிந்த பேரனுக்கு தமிழ் கற்றுத்தருகிறார், பேரனிடம் ஆங்கிலம் கற்றுக்கொள்கிறார்.
"மழையில், தானும், தன் பேரனும் நனைந்து கொண்டிருக்கையில், இது தன்னுடைய கடைசி நாளாக இருக்கக்கூடும் என எண்ணி, தன் பேரனை அழைத்து, "இந்த தாத்தாவ மறந்தாலும், தமிழ மறந்துடாதப்பா....", எனும்போது என் கண்ணீர், தொண்டை வரை பயணித்துவிட்டது.
இளையராஜா:
நீரோடையை போல ஓடிக்கொண்டிருக்கும் காட்சிகளுக்கு கொஞ்சமும் இடையூறாக இல்லாமல் இயற்கையாகவே அமைந்துவிடுகிறது பிண்ணனி இசை. மொத்தமே 10 இடங்களில் மட்டும் பிண்ணனியில் இசை ஓலித்திருக்க கூடும். தாத்தா-வும் பேரனும் முதல் முறையாக சந்தித்துக்கொள்ளும் காட்சிக்கான இசையே போதும் ராஜா ஏன் இன்னும் "ராஜா" என்று சொல்ல. ராஜா-வின் அரியணையில் யாரும் அவ்வளவு சீக்கிரம் அமர்ந்துவிடமுடியாது. அந்த அரியணை ஆயிரம் வருடம் கழித்தும் காலியாகவே இருக்கும் என்பது நிதர்சனம்.
படம், பார்க்க ஒரு நாடகம் போன்ற ஒரு லுக் தெரிதாலும், துளியும் நாடகத்'தன்மை'யற்று இருப்பதே இப்படத்தின் சிறப்பு. பாலுமகேந்திரா பாத்திரமும், அவரின் கண்களுமே இப்படத்தின் உயிர்நாடி.
தன் தலைமுறையிலிருந்து இந்த தலைமுறைக்கு பாலம் அமைத்து அதிலே அன்பையும், பாசத்தையும், தமிழயும் கடத்தியிருக்கிறார். இப்படத்தை ரசிக்க நமக்கு இப்படியொரு தாத்தா இருந்திருக்க வேண்டுமென்றோ, தாத்தா-வுடன் இத்தகையான உணர்ச்சிகளை பரிமாறியிருக்க வேண்டுமென்றோ அவசியமில்லை. அதெல்லாம் இல்லாமலே, நம்மை நெகிழ்ச்சியடையச்செய்துவிடுகிறார்.
"இது இந்த தலைமுறையினர்க்கான படமல்ல, ஆனால் இந்த தலைமுறைக்கான படம்"
என் பக்கத்து சீட்டிலிருந்த ஒரு 4 வயதுமிக்க குழந்தை படம் முழுக்க தன் அப்பாவிடம் கேள்வி கேட்டுகொண்டிருந்தாள், "ஏன் அவர் ரிவர்-ல குளிக்கிறார், இப்ப எந்த தாத்தா செத்துபோனார், திருக்குறள்-னா என்ன?" என்றவாறு. சிறு குழந்தையயும் படத்தில் எங்கேஜ் பண்ணியிருக்கிறார். சற்றே வளர்ந்த அரைவேக்காடுகளுக்கு இப்படம் பிடிக்குமா என்பது சந்தேகமே.
பல இடங்களில் சிரிப்பலைகள், சில இடங்களில் கைதட்டல்கள். படம் முடிந்த கணத்தில், ஒரு சின்ன பையன் எழுந்து (குடும்பமாக வந்திருப்பார்கள் போல) , "அப்பா, தாத்தா எங்க"?? என்றான்.. அப்போது வெளியே நடந்துகொண்டிருந்த நான், இரு வினாடிகள் நின்று அச்சிறுவனை பார்த்துவிட்டு பிறகு நகர்ந்தேன். இம்முறை ஐந்தாவது முறையாக அழுதிருந்தேன்.
தியேட்டரை விட்டு வெளியே வருகையில், ஒரு மனைவி தன் கணவனின் கைகளை பற்றி, "ரொம்ப நாள் கழிச்சி ஒரு நல்ல படம் பார்த்த மாதிரி இருக்குங்க" என்றாள். ஒரு செண்டிமீட்டர் புன்னகையை என்னுள் உதிர்த்துவிட்டு பைக் எடுக்க சென்றேன்.
No comments:
Post a Comment