Thursday, February 13, 2014

பாலு மகேந்திராவும் அவரின் ஒரு மாணவனும்..


இது இரங்கற்பா அல்ல. இரை தேடி ஒரு குருவி மிகப்பெரிய ஆலமரத்தில் வந்து அமர்ந்த கதை. 2010 (அ) 2011 -ல் பாலுமகேந்திரா சினிமா பட்டறையில் சேர விழைந்து, சில காரணங்களால் சேர முடியாமல் போனது. கொஞ்சம் காசு சேர்த்துவிட்டு நுழைவோம் என்று 2013 ஜூனில் அரை மனதோடு அமெரிக்கா பறந்தேன். நான்கே மாதத்தில், சென்னையில் இருந்த சினிமா காந்தம் அமெரிக்காவிலிருந்த என்னை இழுத்துக்கொண்டுவிட்டது. வந்த கணமே அவர் இன்ஸ்டிடியூட்-க்கு ஃபோன் செய்துவிட்டேன் அடுத்த ஃபில்ம் மேக்கிங் கோர்ஸ் எப்போ ஆரம்பம் என்று. அடுத்த நாளே அப்ளிகேஷன் போட அவரது இன்ஸ்டிடியூட் சென்றேன் (2013 தீபாவளி முதல் நாள் என்று ஞாபகம்). வெறும் அப்ளிகேஷன் ஃபில்லிங் தான் என்று நினைத்த எனக்கு, அன்றே எதிர்பாராமல் அவரோடு நேர்முகத்தேர்வும் நடந்தது. அவர் அறையில் நுழைந்தவுடனே அவர் காலில் விழுந்துவிட்டேன். சினிமா பற்றிய என் அறிவை, புரிதலை அவர் தெரிந்துகொள்ள சில கேள்விகளை கேட்டார். நானும் எனக்கு தெரிந்த பதிலை அளித்தேன். நான் ஆங்கிலம் கலக்காத தமிழில் பேச, என்னுடைய தமிழ் அவருக்கு பிடித்திருக்கிறது என்றார். அப்போதே என்னை தேர்வு செய்துவிட்டார்.  நிறைய புத்தகங்களை ப்டிக்குமாறு அறிவுறுத்தினார். கிளம்புகையில் மீண்டும் அவர் காலில் விழுந்து தரிசித்துவிட்டு கிளம்பினேன்.

ஜனவரி 20, 2014 அன்று வகுப்புகள் தொடங்கின. முதல் நாள் அறிமுகம் என்பதால், அவரே ஸ்டார்ட் ஆக்ஷன் சொல்லி எங்களை படம் பிடித்தார் (5டி கேமராவில்). அன்று முதல் தினமும் அவரே எங்களுக்கு பாடம் எடுப்பார். வேறு யாருமல்ல. திரைக்கதை எழுதுவது, கேமரா பேசிக்ஸ், எடிட்டிங், இயக்கம் என ஒவ்வொரு க்ளாசிலும் அழுத்தம் திருத்தமாக பாடமெடுப்பார். தினமும் ஒரு திரைப்படம் வீதமாம எங்களுடன் அமர்ந்து பார்ப்பார். இன்னும் சினிமாவைக் கற்றுக்கொண்டிருப்பவன் போல.

ஒரு வாரம் கழித்து கால் சற்று தடுமாறி விழப்போய் இடது கண்ணுக்கு கீழ் லேசாக அடிபட்டது. அப்பவே சற்று கலங்கி போனோம். நான்கு நாட்களில் நன்றாக திரும்பி வந்த மனுஷன், விட்ட பாடத்தை சனிக்கிழமைகளில் எக்ஸ்ட்ரா வகுப்பு வைத்து முடித்தார். ஓளிப்பதிவு வகுப்பில், ஃபோகஸ் பற்றி விளக்க, என்னை வைத்து, என் பெயரை உச்சரித்து பாடம் எடுத்தபோது  எனக்கு சிலிர்த்துவிட்டது. 10, 20 முறை என் பெயரை உச்சரித்து இருப்பார்.

வீடு:

அன்று வீடு படம் திரையிட்டார். எங்களுடன் அமர்ந்து பார்த்தார். முன் நாள் சத்யஜித்ரேவின் பதேர் பாஞ்சாலி திரையிடப்பட்டிருந்தது. வீடு படம் அப்போது தான் முதன்முறையாக பார்க்கிறேன். வீடு மாதிரியான, நேர்த்தியான, யதார்த்தமான, நேர்மையான படைப்பை இவ்வளவு நாள் எப்படி நான் மிஸ் செய்திருந்தேன். "வீடு படத்தில் உங்கள் குரு சத்யஜித்ரே-வை மிஞ்சி விட்டீங்கள்" என உணர்ச்சிவசப்படாமல், முகஸ்துதி போல் அல்லாமல் அவர் கண்ணை பார்த்து கூறினேன். அவர் தன் புன்னகையில் என் கருத்தை நிராகரித்தார்.

அழியாத கோலங்கள்:

அழியாத கோலங்கள் இரண்டு நாள் கழித்து எங்களுடன் பார்த்தவிட்டு, டைம் மெஷின் ஏறி அவரின் விடலை பருவத்துக்கு சென்று வந்திருக்கிறார் என்பது அவர் பேச்சிலிருந்து தெரிந்தது.

எப்போதும் ரே, இளையராஜா, மூன்றாம் பிறை, குரோசவா, டேவிட் லீன் பற்றிய பேச்சுகள் அதிகமிருக்கும். நல்ல சினிமா என்று தான் நினைக்கும் இடத்துக்கு அருகாமையில் எங்களை இட்டுச்சென்றார். அவ்வாறு தான் பாலா, வெற்றி, விக்ரம், ராமசுப்பு ஆகியவர்களையும் இட்டுச்சென்றிருக்கிறார்.

கடைசி வகுப்பு:

அன்று CREATIVITY (படைப்பாற்றல்) க்ளாஸ். சாமன்யனுக்கும், படைப்பாளிக்கும் உள்ள வித்தியாசம், படைப்பாளியின் உந்துதலுக்கான ஆரம்பப்புள்ளி, படைப்பு மற்றும் படைப்பாளிக்கான விதை பற்றி பேசினார். பேச்சுவாக்கில், "ஒரு படைப்பாளி, தன் படைப்பின் உச்சத்தில் இருக்கும் போதே செத்துவிடவேண்டும்" என கூறினார். தனது DOWNFALL-ஐ பார்க்க எந்த கலைஞனும் விரும்பமாட்டான் என்றார். வகுப்பு முடிந்து கிளம்புகையில் எதேச்சையாக, தற்செயலாக அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம். தேசம் போற்றும் ஒரு ஒளிப்பதிவாளன் தன் வாழ்நாளில் கடைசியாக எடுத்துக்கொண்ட புகைப்படம் அது.

கடைசி நாள்:

வழக்கம் போல சினிமா பட்டறைக்கு சீக்கிரமே சென்றுவிட்டேன். உடல்நிலை சரியில்லை என்ற செய்தி கேட்டு விஜயா ஹாஸ்பிட்டலுக்கு பறந்தேன். பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. பாலா மட்டும் பார்த்துவிட்டு வந்து கண்ணை துடைத்துக்கொண்டு கீழே வந்து சேரில் அமர்ந்து கொண்டார். என்ன ஆச்சு என்று யாரும் சொல்லவில்லை. 50 கிலோ எடை என் இதயத்துக்குள் புகுந்து கொண்டது. ஃபியூனரல்-க்கு ரெடி செய்கிறார்கள் என்ற செய்தி காற்றில் வந்து, காதில் விழுந்து, தொண்டையை முற்றிலுமாக அடைத்துக்கொண்டது. மாறாக கண்களில் மட்டும் என்னை அறியாமல் அருவி போல கண்ணீர் மழை பொழிந்துகொண்டிருந்தேன். கண்ணீர் ஒரு தொற்று வியாதி, என்னிடமிருந்து பலரிடமும், மற்றவரிடமிருந்து என்னிடமும் அழுகை தொற்றிக்கொண்டது.

சினிமா பட்டறையில் அவரை கிடத்தியிருக்கையில், அவர் கை, கால்களையே பார்த்துகொண்டிருந்தேன். ஒரு மிராக்கிள் நிகழ்ந்து அவரின் கை, கால்கள் அசைந்து துள்ளி எழமாட்டாரா என நம்பிக்கொண்டிருந்தேன்; எழவில்லை.

இவையனைத்தும் வரக்கூடாத ஒரு கெட்ட கனவை நான் காண்பது போலவும், காலையில் எழுந்து வழக்கம் போல சினிமா பட்டறை போய் அவரின் மழலை சிரிப்பை பார்க்கமாட்டேனா என ஏங்கிக்கொண்டிருக்கிறேன். ஆம், நான் அந்த கெட்ட கனவைத்தான் கண்டுகொண்டிருக்கிறேன் என நம்பிக்கொண்டிருக்கிறேன்.

விதை:

அவர் விதைத்த நூற்றுக்கணக்கான விதைகளில், மிகச்சிறிய விதையை நான் பெற்றிருந்த போதிலும் அது விருட்சமாக வெளிவர எத்தனித்துக்கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment